மும்பையில் உள்ள ஹஜ் ஹவுஸ் (Haj House) எனும் ஹாஜிகள் இல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நீண்ட நாளாக எதிர்பார்க்கப் பட்ட முஸ்லிம்களுக்கான ஐ.ஏ.எஸ் (Indian Administrative Service) தேர்வு பயிற்சி மையத்திற்கான இறுதி வடிவத்தை இந்திய ஹஜ் கமிட்டி, தனது ஹஜ் இல்லக் கட்டடத்தில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் முன் வைத்தது.
முஸ்லிம்களில் தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ் (Indian Administrative Service) தேர்வுக்கான கட்டணப் பற்றாக்குறை போன்ற குறைபாடுகளால் தேர்ச்சிபெற இயலாமலாகி விடும் மாணவர்களின் துயரத்துக்குத் தீர்வாக, இந்தப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டத்தை நான்கு மாதத்திற்கு முன்னர் இந்திய ஹஜ் கமிட்டி கையெடுத்தது. இதுவரை ஆய்வில் இருந்த இந்தத் திட்டத்திற்கு நேற்று மும்பையில் இறுதி வடிவம் அளிக்கப்பட்டது.
மும்பையில் இதுவே ஐ.ஏ.எஸ் (Indian Administrative Service) தேர்வுக்காக ஏழை முஸ்லிம் மாணவர்களுக்குக் கிடைக்கும் முதல் இலவசப் பயிற்சி வாய்ப்பாகும்.
நேற்று மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் மும்பையிலுள்ள அக்பர் பீர்பாய் கல்லூரியின் முன்னாள் தலைமைப் பேராசிரியர் எஸ்.ஏ.எம் ஹாஷ்மீ அவர்கள் இதன் தலைமை இயக்குனராகத் தேர்வு செய்யப்பட்டார்கள். மும்பையின் பிரபலமான ஹஜ் ஹவுஸ் கட்டிடத்தின் நான்கு மாடிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் மாணவர்களுக்காக வகுப்பறை, ஹாஸ்டல் வசதி, தங்கும் அறை மேலும் உணவகமாகவும் கீழ்மாடி நூலகமாகவும் செயல்படும்.
பயிற்சிக்கு முதற்கட்டமாக 50 மாணவர்கள் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தைச் சார்ந்த UPSC தகுதியுடையவர்கள் இந்தத் தேர்வில் பங்கு பெறலாம். தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர்களில் பொருளாதார வசதியுடையவர்கள் மாதந்திரக் கட்டணமாக ரூ 2,000/ (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) கட்ட வேண்டும். மேலும் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும்.
இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமை நிர்வாகி ஜனாப் முஹம்மது உவைஸ் அவர்கள் கூறுகையில், "இந்த மையம் மாணவர்களின் பயிற்சிக்கு தேவையான அனைத்து சாதனங்களையும் வசதிகளையும் வழங்கும். தகுதியும் திறமையும் உள்ள ஆசிரியர்களின் சேவை இந்த பயிற்சி மையத்திற்குக் கிடைத்திடும் முயற்சியில் அவர்களோடு நாங்கள் தொடர்பு கொண்டு வருகிறோம். மேலும் நாங்கள் இந்த நற்செய்தியை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் நாட்டின் எல்லாப் பகுதி மக்களுக்கும் சென்றடைய செய்து அதன் மூலம் நாட்டின் எல்லாப் பகுதியில் உள்ள முஸ்லிம் மாணவர்களும் பலனடைய வேண்டும் என்பதற்காக இச்செய்தியைப் பரவலாக்குகிறோம்" என்று கூறினார்.
மேலும் எதிர்வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி (16th August 2009 ) பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தை சமர்பிக்கும் இறுதி தேதியாகும் என்றும் தேர்வுத் தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக