வியாழன், 10 டிசம்பர், 2009
வாஜ்பாய், அத்வானி பயங்கரவாதிகள் - திருமாவளவன்
வாஜ்பாய், அத்வானி போலி மிதவாதிகள் எனில் அதன் அர்த்தம் அவர்கள் பயங்கரவாதிகள் என்பதே" என மக்களவையில் லிபரான் கமிசன் மீதாக நடந்த விவாதங்களின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
பாபர் மசூதி தகர்ப்பு தொடர்பாக 17 ஆண்டு விசாரணை அறிக்கையினை நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணை குழு சமீபத்தில் சமர்ப்பித்திருந்தது. இதன் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடந்து வருகிறது. இவ்விவாதங்களின் போது தமிழகத்திலிருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் பங்கு கொண்டு கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே! நேற்றும் இன்றும் லிபரான் அறிக்கை தொடர்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிற விவாதங்களை நாடே உன்னிப்பாகக் கவனித்து கொண்டிருக்கிறது. இந்த விவாதங்களுக்குப் பின்னர், அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்றும் நடுநிலையான அரசியல் ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். வழக்கமான கமிசன் அறிக்கைகளைப் போல இதுவும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு விடுமோ? என்கிற ஐயமும் பொதுமக்களிடையே உள்ளது.
எனவே அரசு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். ஊருக்குத் தெரிந்த, உலகத்திற்கே தெரிந்த உண்மையைத்தான், 17ஆண்டுகளுக்குப் பிறகு, லிபரான் இந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.
இதில் புதிய உண்மைகளையோ அதிர்ச்சியடையக் கூடிய புதிய சதிகளையோ கூறிவிடவில்லை. இந்த அறிக்கையில் எமக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. எனினும் துணிவாக சில உண்மைகளை லிபரான் பதிவு செய்துள்ளார். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன்.
குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஸி போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமானவர்கள் என்றும் ஆர்எஸ்எஸ், சிவசேனா, பாரதீய ஜனதா கட்சி ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும் திட்டமிட்டே மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளனனர் என்றும் அவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் லிபரான் கூறியுள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலாவது, இந்த அரசு தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இது முஸ்லீம்களுக்குக் காங்கிரஸ் கட்சி துரோகமிழைத்ததாக அமையும். இந்த மண்ணில் ராமனின் பெயரால், பாபர் மசூதியை மட்டுமல்ல பெளத்த, சமண மடங்களையும் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக வன்முறையின் மூலம் இடித்து தள்ளி , அங்கே இந்துக் கோயில்களை எழுப்பியுள்ளனர்.
ராமனின் பெயரால் சிவபக்தனான இராவணனையே அழித்திருக்கிறார்கள் என்பதை இராமாயணம் என்கிற புராணத்தின் மூலம் அறிய முடிகிறது. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் இராமன் தான் மிகப்பெரிய பயங்கரவாதி என்று தெரிய வருகிறது. அந்த வகையில் இராமனின் வாரிசுகளாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் வாஜ்பாய், அத்வானி, ஜோஸி போன்ற இந்துத்துவப் பயங்கரவாதிகள் அனைவரையும் அரசு உடனே கைதுசெய்ய வேண்டும்.
அமெரிக்காவில் இரட்டைக்கோபுர கட்டிடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்கிறபோது, பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா? அதனால் தான் லிபரான் தனது அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி போன்றவர்களைப் போலி மிதவாதிகள் என்கிறார். அப்படியென்றால் பயங்கரவாதிகள் என்று தான் மறைமுகமாகக் கூறுகிறார். எனவே இந்துத்துவப் பயங்கரவாதிகள் 68 பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்; மதவெறியர்களுக்கு இதன்மூலம் ஒரு பாடம் புகட்டவேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன்" என்று பேசினார்.
Labels:
திருமாவளவன்

0 comments:
கருத்துரையிடுக