திங்கள், 18 ஜனவரி, 2010

ஹைட்டி பூகம்பம் - மிகமோசமான பேரழிவு : ஐ.நா.!

ஹைட்டியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பூகம்பம் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோரைக் காவு கொண்டிருப்பதாக அச்சம் தெரிவிக்கப்படும் அதேசமயம், இடிபாடுகளை அகற்றுவதற்கும் சிக்கிக்கிடக்கும் சடலங்களை வெளியே கொண்டு வரவும் மீட்புப் பணியாளர்கள் கடுமையாகப் போராடி வருவகிறார்கள்.
நிலநடுக்கத்தால் அந்நாட்டின் உள்ளூர் நிர்வாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமானங்கள் முழுமையும் சீர்குலைந்துள்ள நிலையில், இந்த நிலை இதுவரை தாம் எதிர்கொண்ட மிக மோசமான பேரழிவென ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஹைட்டியின் தலைநகர் போட்ஓபிரின்ஸ் இடிந்து தரைமட்டமாகியிருப்பதுடன், வீதிகள் யாவும் இடிபாடுகளால் மூடப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 7.0 மக்னிரியூட் அலகு பூமியதிர்வினால் இறந்தவர்கள் தொகை இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானதென அரச அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். காயமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைகளின் வெளிப்புறங்களில் காத்திருக்கின்றனர்.
விமானநிலையம் நிரம்பி வழிகின்றது, அதன் வீதிகளும் முடக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் பற்றாக்குறையால் அங்குள்ள ஒரு சில மருத்துவமனைகளும் இயங்குவதில் சிக்கல்களை ஏற்பட்டுள்ளன. நில நடுக்கம் ஏற்பட்டு சில தினங்கள் கடந்துள்ள நிலையிலும் அங்குள்ள பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு இதுவரை உதவிகள் எதுவும் சென்றடையவில்லை.
போர்ட் தோ பிரான்ஸ் நகரில் வீடுகளை இழந்த நிலையில் நீரின்றி உணவின்றி நிர்க்கதியாகியுள்ள மக்கள், இடிபாடுகள் நிறைந்த பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். தலைநகருக்கு வெளியே, லியோகேன் நகரில் தொன்னூறு சதவீதம் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு செயலர் ஹிலாரி கிளிண்டன், நிலமைகளைக் கண்டறிவதற்காக ஹைட்டி பயணமாகியுள்ளார். நிவாரணப்பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்து இந்த பயணத்தின் போது அவர் கவனம் செலுத்துவார்.

0 comments:

கருத்துரையிடுக