சனி, 28 ஆகஸ்ட், 2010

செல்போன் ஒட்டு கேட்டால் ரூ.1 கோடி அபராதம்; சிறை

செல்போன் ஒட்டு கேட்பவர்களுக்கு ரூ.1 கோடி அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய டெலிகிராப் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. சாதாரண தொலைபேசிகளை ஒட்டு கேட்க வேண்டும் என்றால் அதற்கான கருவிகளை வயர்களில் இணைக்க வேண்டும். ஆனால், செல்போனை ஒட்டு கேட்க இந்தக் கட்டுப்பாடு இல்லை. செல்போனில் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்கள் காற்றில் மின்காந்த அலைகளாக பரவிக் கிடப்பதால் தக்க கருவிகளை கொண்டு எந்த இடத்திலும் யாருடைய செல்போன் உரையாடலையும் யார் வேண்டுமானாலும் ஒட்டு கேட்கலாம். 
 இதுபோன்ற கருவிகள் வெகு சாதாரணமாக வெளிநாட்டு பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. இத்தகைய கருவிகளை பயன்படுத்திதான் அண்மையில் அரசியல் தலைவர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டன. இது நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியது. இந்நிலையில், செல்போன் ஒட்டு கேட்பதை தடுக்கும் வகையில் டெலிகிராப் சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
இதன்படி, செல்போன் ஒட்டு கேட்பவருக்கு ரூ.1 கோடி அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு பத்திரிகைகள் வாயிலாக எச்சரிக்கை விடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய செயல்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கும் திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது. செல்போன் ஒட்டு கேட்கப்படுவது தனிநபர் சுதந்திரத்துக்கு மட்டுமல்லாது நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலான விஷயம் என்பதால் இந்த விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
தினகரன்

0 comments:

கருத்துரையிடுக