புதன், 12 ஜனவரி, 2011
எல்கேஜி படிப்பில் சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை
எல்கேஜி படிப்பில் சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நர்சரிப் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐஏஎஸ் கூட எளிதாக படித்து விட முடியும். ஆனால் எல்கேஜியில் அட்மிஷன் வாங்குவது மிகப் பெரிய மலையைப் பிளக்கும் காரியமாகியுள்ளது. விடிய விடிய பள்ளிகளின் முன்பு வரிசையில் காத்திருந்து, விண்ணப்ப பாரம் வாங்கி, அதைக் கொடுத்து, பள்ளிகள் நடத்தும் நேர்முகத்தேர்வில் அப்பா, அம்மாக்கள் கலந்து கொண்டு சரியாக பதிலளித்து, பிள்ளைகள் நுழைவுத் தேர்வு எழுதி பாஸ் செய்தால்தான் அட்மிஷன் கொடுக்கின்றன பல பள்ளிகள்.
இதில் பல பள்ளிகள், அப்பா, அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால் அல்லது பட்டப் படிப்பு படித்திருக்காவிட்டால் அட்மிஷனே தருவதில்லை. இந்தக் காலக் கொடுமைக்கு முடிவு கட்டும் வகையில், 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வியை சட்டம் மூலம் கொண்டு வந்துள்ளது அரசு. மத்திய அரசின் இந்தத் திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் முறையாக அமல்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் 8ம் வகுப்பு வரை யாரையும் பெயிலாக்கக் கூடாது என்றும் சட்டம் கூறுகிறது. இருப்பினும் எல்.கே.ஜிக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் கொடுமை இன்னும் பல நர்சரிப் பள்ளிகளில் நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் இதை நடத்தக் கூடாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக