செவ்வாய், 1 மார்ச், 2011

சட்டசபை தேர்தல்: ஏப்ரல் 13-ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு


தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் ஏப்ரல்- மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.  5 மாநிலங்களிலும் தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளையும் தலைமை தேர்தல் கமிஷன் செய்து முடித்துவிட்டது. தற்போது வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 5 மாநிலங்களுக்கும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டு விட்டன. 
தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட வேண்டியிருந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையர் குரேஷி தேர்தல் தேதியை இன்று மாலை 6 மணிக்கு அறிவித்தார். 

ஏப்ரல் 13-ந்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என குரேஷி அறிவித்தார். மேலும் அனைத்து மாநிலத்திற்கும் மே 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்தார். 

அசாமில் 2 கட்டமாக ஏப்ரல் 4 மற்றும் 11-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், மேற்கு வங்கத்திற்கு 6 கட்டமாக ஏப்ரல் 18,23,27 மற்றும் மே 3,7,10 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்தார். தமிழ்நாட்டில் மார்ச் 19-ந்தேதி முதல் மனுதாக்கல் செய்யலாம் எனவும், மார்ச் 26-ம் நாள் மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்றும், பரீசிலனை 28-ந்தேதி என்றும், வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30 எனவும், ஏப்ரல் 11-ந்தேதி மாலை 5 மணிக்குள் பிரசாரம் முடிய வேண்டும் எனவும் அறிவித்தார். 

தமிழ்நாட்டில் 4 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்றும். 54 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் எனவும் கூறினார். தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற்றபின் வாக்கு எண்ணிக்கை நடைபெற ஒரு மாத கால இடைவெளி இருப்பது இதுவே முதல் முறையாகும். 

தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் ஆயுட்காலம் மே 16-ந்தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக