சனி, 2 ஜனவரி, 2010

குற்றப்பிரிவுச் சட்ட திருத்தங்கள் அமலுக்கு வந்தன



குற்றப்பிரிவு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் டிசம்பர் 31, 2009 முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குற்றப்பிரிவு சட்டத்தில் கடந்த 2006-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. எனினும் இந்த திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தன. இந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய திருத்தங்கள் வருமாறு :
  • பாதிக்கப்பட்டவர் அரசு தரப்புக்கு உதவவும் மேல் முறையீடு செய்யவும் ஒரு வழக்கறிஞரை நியமித்து கொள்ள அனுமதிக்கப்படுவார். 
  • சட்டப் பிரிவு 376, 376 ஏ முதல் 376 டி வரையிலான குற்றங்கள் பெண் நீதிபதியை கொண்ட நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும். 
  • ஒரு பெண் கைது செய்யப்படும் பட்சத்தில் இந்த நடைமுறை கைவிடப்படும் 
  • கைது செய்யப்பட்டவுடன் அந்த நபர் மருத்துவரால் உடனடியாக பரிசோதிக்கப்பட வேண்டும். 
  • பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவரிடம் அவரது வீட்டில், இயன்ற வரையில் ஒரு பெண் காவல் துறை அதிகாரி, பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சமூக சேவகரின் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும். 
  • இந்த வாக்குமூலங்கள் மின்னணு முறையில் ஒலி-ஒளி பதிவு செய்யப்பட வேண்டும். 
  • சட்டப் பிரிவு 161-ன் கீழ் சாட்சிகளின் வாக்குமூலங்கள் வழக்கு ஆவணத்தில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். 
  • சட்டப் பிரிவு 376 முதல் 376 டி-ன் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான விசாரணை கூடுமான வரையில் இரண்டு மாத காலங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். 
  • மனவளர்ச்சி குன்றியவருக்கு எதிரான வழக்கில் உரிய பாதுகாப்பு முறைகள் கையாளப்பட வேண்டும். 
  • குற்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர் அல்லது அவரை சார்ந்திருப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக மாநில அரசு புதிய திட்டமொன்றை உருவாக்கும் வகையில் 357 ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது. 
இவை தவிர மேலும் சில திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் அறிவிக்கையாக வெளியிடப்பட்டு டிசம்பர் 31, 2009 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த திருத்தங்களில் பிரிவுகள் 5, 6 மற்றும் 21 பி அறிவிக்கையில் இடம் பெறவில்லை. இவை காவல் துறை அதிகாரி கைது செய்ததற்கான அதிகாரம், விசாரணையை தள்ளி வைப்பது அல்லது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த நீதிமன்றத்தின் அதிகாரம் தொடர்புடையதாகும். இது தொடர்பாக சில எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இது மத்திய சட்ட ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
சட்ட ஆணையம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த அறிக்கை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இது கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது சமர்ப்பிக்க இயலாததால் பட்ஜெட் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டு திருத்தங்கள் செய்யப்படும். எனவே தற்போது அவை இந்த அறிவிக்கையில் இடம் பெறவில்லை.

0 comments:

கருத்துரையிடுக