புதன், 20 ஜனவரி, 2010
ஹைத்தியில் மீண்டும் பூகம்பம்- மக்கள் அலறி்அடித்து ஓட்டம்
பூகம்பப் பேரழிவில் இருந்து இன்னும் மீளாத நிலையில் ஹைத்தி தீவு நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
எட்டு நாட்களுக்கு முன்பு உலுக்கிய பூகம்பத்தால் ஹைத்தியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியிருப்பதாக அஞ்சப்படுகிறது. போர்டாபிரின்ஸ் நகரில் கிட்டதட்ட எல்லா கட்டிடங்களுமே இடிந்து சுடுகாடாக மாறி மிகப்பெரிய பேரழிவு நடந்துள்ளது.இடிபாடுகளில் சிக்கிய சடலங்கள் கூட முழுமையாக மீட்கப்படாத நிலையில் இன்று காலை ஹைத்தியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிர் பிழைத்திருக்கும் எஞ்சியுள்ள மக்களும் பெரும் பீதிக்கு உள்ளானார்கள். ஆங்காங்கே கட்டிடங்களில் தஞ்சமடைந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள்.
பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால் விரிசல் ஏற்பட்டன. இதனால் உள்ளே இருந்த மக்களும் பதட்டத்துடன் வீதிக்கு ஓடிவந்தார்கள். பூகம்பம் தாக்கியதைத் தொடர்ந்து தலைநகர் போர்டாபிரின்ஸில் உள்ள கனடா நாட்டுத் தூதரகத்தின் மேற் கூரை துண்டு துண்டாக சிதறி விழுந்தது. இதையடுத்து அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் சிதறி ஓடினர்.
அந்த சமயத்தில் பத்திரிக்கையாளர் அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு புகைப்படக்காரர் மீது ஒரு சிதறல் வந்து விழுந்தது. இதையடுத்து அவர் அலறி அடித்துக் கொண்டு ஓடினார். ஆனால் அவருக்கு கடும் காயம் ஏற்படவில்லை
போர்டாபிரின்ஸ் நகரில் இருந்து வடமேற்கு திசையில் 35 மைல் தொலைவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத் தகவல் தெரிவித்துள்ளது.உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.03 மணிக்கு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1என பதிவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது
0 comments:
கருத்துரையிடுக