வெள்ளி, 15 ஜனவரி, 2010

கங்கண சூரிய கிரகணம் தமிழகத்தில் 91 சதவிகிதம் தெரியும்


வானில் ஓர் அரிய நிகழ்வாக வரும் வெள்ளிக்கிழமை (ஜன.15) கங்கண சூரிய கிரகணம் (வளை கிரகணம்) நிகழ்கிறது. தமிழகத்தில் இது 89 சதவிகிதம் முதல் 91 சதவிகிதம் வரையில் தெரியும். பாதுகாப்பான முறைகளை கையாண்டு இந்த அரிய நிகழ்வை காணவேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நேர்க்கோட்டில் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதனால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அந்த வகையில் வானில் ஓர் அரிய நிகழ்வாக ஜனவரி 15-ம் தேதி கங்கண சூரியகிரகணம் (வளை கிரகணம்) நிகழ்கிறது.
இந்தியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் இது தெரியும். கேரளம், தமிழகம் தவிர நாட்டின் பிற பகுதிகளில் இது பகுதி சூரிய கிரகணமாக தெரியும். அங்குள்ளவர்கள் சூரியனின் ஒரு பாதியைச் சந்திரன் மறைப்பது போல் காண்பார்கள்.
சென்னையில் சுமார் 88.5 விழுக்காடு வரை சூரியன் மறைக்கப்படும். கன்னியாகுமரியிலும் தனுஷ்கோடியிலும் சந்திரனின் நிகழ்வின் மையப் பகுதிக்கு அருகில் இருப்பதால் அதிகபட்ச கிரகணத்தின்போது ஓரளவு வட்டமான வளைய வடிவில் சூரியன் தோன்றும். மேலும் கங்கண சூரிய கிரகணம் நிகழும் கால அளவும் அதிகமாக இருக்கும்.
கன்னியாகுமரியில் முற்பகல் 11.04-க்கு கிரகணம் தொடங்கும். பிற்பகல் 3.05-க்கு முடிவுறும். பகல் 1.14 மணிக்கு அதிகபட்ச கிரகணம் நிகழும். இந்நேரத்தில் சூரியனை எக்காரணம் கொண்டும் வெறும் கண்களால் காணக் கூடாது. அது பார்வை இழப்பை ஏற்படுத்தும். சென்னை, கன்னியாகுமரி, காரைக்கால், காவலூர், மதுரை, நாகப்பட்டினம், நாகர்கோவில், புதுச்சேரி, ராமேஸ்வரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் 89 சதவிகிதத்தில் இருந்து 91 சதவிகிதம் வரையில் ஏற்படும் கிரகணத்தை காணமுடியும்.
வாழ்க்கையில் எப்போதாவது வரும் இந்நிகழ்வு நடக்கிறது. எனவே, இதை ஒரு விபத்தாக பார்க்காமல், வாய்ப்பாக கருதி பாதுகாப்பான முறைகளில் பார்க்க வேண்டும். கர்ப்பிணிகள் உள்ளிட்ட எல்லாரும் சூரிய கிரகணத்தின்போது இயல்பாக வெளியில் செல்லலாம். உணவு சாப்பிடலாம். மழைக்கால கருமேகம் சூரியனை மறைப்பதுபோல், சந்திரன் சூரியனை மறைப்பதுதான் சூரிய கிரகணம் என்று அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கிரகணம் குறித்து சில பொய்யான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. சூரிய கிரகணத்தின்போது சமைத்த உணவு நஞ்சாகிப் போகும், கிரகணத்தின்போது யாரும் சாப்பிடக் கூடாது, வீட்டின் கதவுகள், ஜன்னல்களை மூடி வைத்திருக்க வேண்டும், கிரகணம் முடிந்தபின் குளித்தே ஆகவேண்டும் என்றெல்லாம் பல்வேறு தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இது தவறு.
இந்த தகவல்கள் அறிவியல் ரீதியாக உண்மையில்லை என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க குமரி மாவட்ட தலைவர் எம். ஜெசர் ஜெபநேசன் தெரிவித்தார்.
வானில் இப்படியொரு அற்புத நிகழ்வுக்கு 108 ஆண்டுகள் ஆகும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதால், நாம் வாழும் காலத்தில் நடக்கும் இந்த அரிய காட்சியை காண அனைவரும் தயாராக வேண்டும்.
சூரிய கிரகணத்தை எப்படி பார்க்கலாம்..?
சூரியனின் பிம்பத்தை கண்ணாடி மூலம் பிடித்து சுவற்றில் விழச் செய்து பார்க்கலாம். ஊசி துளை கேமரா தயார் செய்து சூரிய பிம்பத்தைப் பிடித்தும் பார்க்கலாம். தொலை நோக்கியில் அல்லது பைனாகுலரில் பிம்பத்தை பார்க்கலாம். ஆனால், நேரடியாக பார்க்கக் கூடாது. கருமையான, வெல்டர்ஸ் உபயோகப்படுத்தும் எண் 14 தரமுள்ள கண்ணாடியில் பார்க்கலாம். அலுமினியப் பூச்சு அல்லது மைலார் பிலிம் தாளினால் செய்யப்பட்ட சூரிய வடிகட்டி கண்ணாடியால் பார்க்கலாம். இவற்றை அனுபவமுள்ள ஒருவரின் துணை கொண்டே செய்ய வேண்டும்.
சூரிய கிரகணத்தை எப்படி பார்க்கக் கூடாது..?
எந்த சமயத்திலும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. தொலைநோக்கி மூலமோ, பைனாகுலர் மூலமோ கண்டிப்பாக பார்க்கக் கூடாது.
புகைபிடித்த கண்ணாடியாலும் பார்க்கக் கூடாது. கூலிங் கிளாஸ், கலர் பிலிம், சூரிய ஒளியை தடுப்பதற்கு ஒட்டப்பட்ட கண்ணாடிகள் மூலம் பார்க்கக் கூடாது. சூரிய பிம்பத்தை சாயம் ஏற்றப்பட்ட தண்ணீரில் பிடித்துப் பார்க்கக் கூடாது. சரியான உபகரணங்கள் இருந்தாலும் ஒருசில வினாடிகளுக்கு மேல் பார்க்கக் கூடாது.

0 comments:

கருத்துரையிடுக