செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
நாகர்கோவிலில் பரபரப்பு: கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கட்டாய தாலி
குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாணவி வந்தனா (பெயர் மாற்றப்பட்டுள் ளது). இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் முதுகலை வரலாற்று துறையில் பயின்று வருகிறார். இதே வகுப்பில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) படித்து வருகிறார். ராஜாவிற்கு ஒரு பேராசிரியரின் பரிந்துரையின் பேரில் இடம் ஒதுக்கியுள்ளனர். இந்நிலையில் வந்தனா ராஜா தன்னை அடிக்கடி தொந்தரவு செய்து வருவ தாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்துள் ளார்.
இந்த புகார்களின் பேரில் நிர்வாகம் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ராஜாவும் மாணவிகள் சிலர் தன்னை பார்த்து ஜொள்ளுவிடுவதாக தனது நட்பான ஆசிரியரிடம் புகார் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் காலை 11 மணியளவில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.
கல்லூரி முதல்வர் அறை அருகே மாணவி வந்தனாவும் தனது தோழிகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு தாலிகயிறுடன் வந்த ராஜா வந்தனாவின் கழுத்தில் அதை சூடினார். இதனால் அதிர்ச்சியடைந்த வந்தனா தாலியை கழற்றி வீச அதனை மீண்டும் கட்ட ராஜா முயன்றதாக தெரிகிறது. இதனை கண்ட பிற மாணவிகளும் ராஜாவை தள்ளிவிட்டனர். இச்சம்பவத்தை கண்ட ஊழியர்கள் சிலர் மாணவியின் செயினைத்தான் யாரோ பறிக்கிறார்கள் என நினைத்து ராஜாவை நோக்கி ஓடிவந்தனர். கல்லூரி வளாகத்தில் உள்ள கதவும் அடைக்கப்பட்டது. ஆனால் ராஜா சுவர் ஏறிக்குதித்து தப்பியோடிவிட்டாராம்.
குடும்ப கவுரவம், மானம் கருதி வந்தனாவின் குடும்பத்தினர் புகார் எதுவும் செய்யவில்லை. எனினும் சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள், மற்றும் மாணவர் பேரவைகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவர் சஸ்பெண்ட் மட்டும் செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு கல்லூரியில் ஒரு ஆசிரியரால் ஒரு மாணவி கர்ப்பம் ஆனதாக கூறப்படுகிறது.
கண்காணிப்பு குழு அவசியம்
இதுகுறித்து பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: எல்லா துறைகளிலும் ஒருசில களைகள் இருப்பதால் அனைவரையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை உள்ளது. இளநிலை 3ம் ஆண்டு, முதுகலை படிப்பின் போது குருப் புராஜக்ட் உண்டு. இதில் மதிப்பெண்கள் அதிகம் பெற்று தேர்ச்சி பெற தங்களது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டும் சில ஆசிரியர்களும் உள்ளனர். இதனால் சபல ஆசிரியர்களின் சில்மிசங்களை மானம் போய்விடுமே எனக்கருதி மாணவிகள் சகித்து கொள்ளும் நிலை உள்ளது. இதில் சில மாணவிகள் தங்களை இழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. எனவே மாணவிகளுக்கு ஆசிரியைகளையும், மாணவர்களுக்கு ஆசிரியர்களையும் இதுபோன்ற புராஜக்ட்களுக்கு தலைவர்களாக நியமிக்க வேண்டும். மேலும் மாணவர் பேரவை நிர்வாகிகள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பேராசியர்கள், கல்லூரி நிர்வாகிகள் கொண்ட கண்காணிப்பு குழுவை பல்கலை நியமித்து இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
* கடந்தாண்டு நூலகத்திற்குள் வந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒரு கல்லூரியில் நூலகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பின்னர் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அவரை பணிநீக்கம் செய்ய கோரிக்கை எழுந்துள்து.
தினகரன்
0 comments:
கருத்துரையிடுக