சனி, 22 ஜனவரி, 2011
பெரும் வன்முறையாக மாறிய கர்நாடக பந்த்.
ஆளும் பாஜக அறிவித்துள்ள கர்நாடக பந்த் பெரும் வன்முறையாக மாறியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பொதுச் சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்து வருகின்றனர். இதுவரை 31 பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. நகரில் உள்ள அனைத்து பேருந்து பணிமனைகளையும் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். பெங்களூர் ஜெயநகர், ஆர்கே புரம், எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய இடங்களில் பேருந்துகள் அடித்து நொறுக்கி எரிக்கப்பட்டன. தும்கூரில் துருவீகரேயிலும் அரசு பேருந்துகள் எரிக்கப்பட்டன. பெங்களூருக்கு வெளியே ஹாஸன், தேவநகரே மாவட்டத்தின் பல பகுதிகளில் பேருந்துகள் தொடர்ந்து எரிக்கப்பட்டு வருகின்றன.
பெங்களூர் பழைய மெட்ராஸ் சாலை கலவரக்காரர்களால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மூடப்பட்டது. அங்குள்ள டின் பேக்டரிக்கு பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் நிறுத்தப்பட்டனர். அங்கு கர்நாடக ஆளுநர் பரத்வாஜின் கொடும்பாவிகளைக் கொளுத்தினர். ஆனால் போலீசார் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வன்முறையாளர்கள் ஒரு ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி கலாட்டா செய்த போது மட்டும் போலீசார் தலையிட்டு அனுப்பி வைத்தனர். ஷிமோகா, பெல்காம் உள்ளிட்ட கர்நாடகத்தின் உள்ளார்ந்த பகுதிகளிலும் நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரகிறது. குறிப்பாக உத்தர் கர்நாடகப் பகுதிகளில் பாஜக ஆதரவாளர்கள் என்ற பெயரில் வன்முறையாளர்கள் பொது சொத்துக்களை சூறையாடி வருகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக