வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

பள்ளித் தேர்வு முறையில் மாற்றம் – ஜெ., அறிவிப்பு

அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளித் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஓர் ஆண்டில் மூன்று முறை தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மூன்று பருவத் தேர்வுகள் மதிப்பெண்கள் மூலம் கூட்டு மதிப்பீட்டு முறை பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டு மூலம் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் ஜெயலலதா இன்று அறிவித்தார்.
உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க அரசு சில திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதாக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். அதன்படி, 65 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 710 நடு நிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப் படுவதாக தெரிவித்தார். மேலும் 9,735 பட்டதாரி ஆசிரியர்கள், 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த ஆண்டில் நிரப்பப் படவுள்ளதாக அவர் தெரிவித்தார். பள்ளிகளில் தொழிற்கல்வி, உடற்கல்வி உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படும் என்றும் முதலைமைச்சர் அறிவித்தார். இதனால் 6,7,8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.
மேலும், பள்ளிகளில் கழிப்பறைகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் என சீரமைப்பு மேற்கொள்வதற்கு, ரூ.1,082.71 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என ஜெயலலிதா தெரிவித்தார். நிலை உயர்த்தப்பட்ட மேல் நிலைப்பள்ளிகளில் 3,187 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எல்லா மாணவ மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் ஒரே மாதிரியாக அளிக்கப்படுவது போல், எல்லாருக்கும் ஒரே மாதிரியாக புத்தகப் பைகள் கொடுக்கப்படவுள்ளன. கணக்கு உபகரணப் பெட்டி (ஜியாமெண்ட்ரி பாக்ஸ்), வண்ண பென்சில்கள், புவியியல் வரைபடம் ஆகியவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் கூறினார்.
மேலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்களாக, துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 5,000 பணியிடங்கள் புதிதாக நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் பட்டியல், இனி, மாணவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டு, தொழில்நுட்பம் சார் ரகசியக் குறியீடு இருக்கும் வகையில் வழங்கப்படும் - மாணவர்களின் சிந்தனைத் திறனை ஊக்குவிக்க 7 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்களுக்கு சதுரங்க போட்டிகள் நடத்தப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.
அரசு தொடக்க மற்றும் உயர்நிலை, நடுநிலை, மேல்நிலைப் பள்ளி வகுப்பு கற்றல் கற்பித்தலை மேம்படுத்த, தகவல் தொழில்நுட்ப திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது, பள்ளி ஆசிரியர்களுக்கான திட்டமாக செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஆசிரியர்களுக்கான தனிப் பயிற்சி திட்டம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
அனைத்து மாணவர்களுக்கும் தரமான கணினி மூலமான நவீன கல்வி கிடைக்க, செயற்கைக் கோள் மூலம் பாடங்களைப் பார்க்க வசதி ஏற்படுத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக