செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி: அமைச்சர் கபில் சிபல் யோசனை

நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஹிந்தி கற்பிக்கப்பட வேண்டுமென்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

தேசிய மொழியை அனைவரும் அறிந்திருக்கும் போது நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எளிதில் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற உயர்கல்வி வாரியக் குழு கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியது:

அனைத்து மாநிலங்களிலும் பிராந்திய மொழியுடன் தேசிய மொழியான ஹிந்தியும் கற்பிக்கப்பட வேண்டும். பல மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் புலமை வாய்ந்தவர்களாக உள்ளார்கள். ஆனால் பிற மாநில மொழிகளையும் கற்றுக் கொள்வதன் மூலம்தான் அவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று வெற்றிகரமாகப் பணியாற்ற முடியும். முக்கியமாக தேசிய மொழியான ஹிந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சிந்திக்கும் திறனை வளர்க்கும் வகையில் நமது கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். தற்போது நாம் அறிவைத் தேடிப் பெறுபவர்களாக இருக்கிறோம். எதிர்காலத்தில் அறிவின் உற்பத்தித் தளமாக இந்தியா மாற வேண்டும். நம்மிடம் இருந்து வெளிநாட்டவர் கற்றுக் கொள்ளும் நிலை வர வேண்டும்.

வட மாநிலங்களுக்கு வரும் பிற மாநில மாணவர்களால் சரளமாக ஹிந்தி பேச முடிவதில்லை. ஆனால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார்கள். எனவே நமது நாட்டுக்குள் முக்கியத் தொடர்பு மொழியாக இருக்கும் ஹிந்தியை அனைத்து மாணவர்களும் அறிந்திருப்பது அவசியம். ஹிந்தியை அனைவருக்கும் கற்பிக்க நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான தருணம் என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக