சனி, 23 ஜனவரி, 2010

விஜய் டி.வி.யின் விபரீத முயற்சியும்! டிஎன்டிஜேவின் உடனடி நடவடிக்கையும்.


விஜய் டிவியில் கடந்த வாரம் (17-01-2010) நடக்க இருப்பதாக காண்பிக்கப்பட்ட நீயா? நானா?’ என்ற நிகழ்ச்சியின் விளம்பரத்தில் முஸ்லிம் பெண்களே ஃபர்தாவை குறை கூறுவது போன்ற காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஒரு நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தால் அதுபற்றிய ஞானம் உள்ளவர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும்.
படிப்பறிவோ, அனுபவ அறிவோ இல்லாத ஒருவரிடம் அறுவை சிகிச்சை செய்வது எப்படி எனக் கேட்டால் தனக்கு எது தெரியுமோ அதைத்தான் அவர் கூறுவார். அவரது சொல்லைக் கேட்டு அறுவை சிகிச்சை செய்திட முடியாது. அதுபோலத்தான் இதுவும்.

வியாபார ரீதியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் அதில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை விதைப்பதுதான் தொலைக்காட்சிகளின் நோக்கம். அதற்காக இஸ்லாமியர்களையும், மற்றவர்களையும் விவாதத்திற்கு அழைக்கிறோம் என்று கூறி எதிர்தரப்பினரை சரியாக தேர்ந்தெடுத்துவிட்டு முஸ்லிம்கள் தரப்பில் அதுபற்றிய ஞானம் இல்லாதவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
அவர்களோ தங்கள் முகம் தொலைக்காட்சியில் தெரிந்தாலேபோதும் எனும் எண்ணத்தில் தங்களுக்கு தோன்றியதையும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் விரும்புவதையும் கூறிவிடுகின்றனர். இதனால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்பை இவர்கள் உணருவதில்லை.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த நீயா? நானா?’ நிகழ்ச்சியில் பர்தா தேவைதான் என்று பேசிய சகோதரர் அமீருத்தீன் அவர்கள் நம்மை தொடர்பு கொண்டார். அவர் கூறியதாவது…
“பர்தாவின் அவசியத்தை பற்றி பேசக் கூடிய தரப்பில் என்னை அழைத்தார்கள். அங்கு சென்று கலந்து கொண்டபோது, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மேற்கோள் காட்டி பேசியபோது, குர்ஆன் ஹதீஸ்களைப் பற்றியெல்லாம் பேசக் கூடாது என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் சட்டம் போட்டார். மேலும், பர்தா தேவையில்லை என்று சொல்லும் முஸ்ம் பெயர் தாங்கிகளுக்குத்தான் அதிக நேரம் வழங்கப்பட்டது. அதற்கு பதிலளிக்க முயன்ற நமது தரப்புக்கு மைக்கே வழங்கப்படவில்லை. மேலும் பர்தா தேவையில்லை’ என்று கூறிய தரப்பில் தனது உடன் பரிணாமங்கள் வெளியில் தெரியக் கூடிய அளவுக்கு இறுக்கமான ஆடையணிந்து ஒரு முஸ்ம் பெயர் தாங்கி பெண் நிகழ்ச்சி நடத்துனர் கோபி நாத்தை, கோபி… கோபி… என்று செல்லமாக அழைத்தார்.
அது அவரது தோழியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இவரைப் போன்று முஸ்ம் பெண்கள் உடையணியலாமே என்று கோபிநாத் கூறி அந்த பெண்மணிக்குத்தான் நிகழ்ச்சியில் இறுதியில் பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நானே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பக்கூடாது என்று உறுதியாக இருந்தேன்.
டிஎன்டிஜே முற்றுகைப் போராட்டம் அறிவித்ததும் முதல் சந்தோஷப்பட்டவன் நான்தான். தக்க தருணத்தில் டிஎன்டிஜே போராட்டத்தை அறிவித்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளது பாராட்டதக்கது…” என்று தனது மனக்கு முறலை நம்மிடம் கொட்டித் தீர்த்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபரே இந்த அளவுக்கு நொந்துபோய் அதை எதிர்க்கின்றார் என்றால், நிகழ்ச்சியின் விபரீதத்தை சொல்த்தான் தெரிய வேண்டுமா?
கடந்த வருடம் அக்டோபர் மாதம் விஜய் டி.வி.யில் பெண்கள் தாலி அணிவது அவசியமா?’ என ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அது இந்துக்களின் மனதை வேதனைப்படுத்தியது. அந்நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத், தான் எந்த முடிவை சொல்ல விரும்புகிறாரோ அந்த தலைப்பில் திறமையானவர்களை வைப்பது வழக்கம். பொதுவாகவே இந்நிகழ்ச்சிகளில் எவ்வாறு பேச வேண்டும் என்று முன்கூட்டியே ஒத்திகை பார்த்துதான் நடத்தப்படும். அவ்வாறு இந்த நிகழ்ச்சியில் தாலி தேவையில்லை எனும் அணியில் சிலரை சாமார்த்தியமாக பேச கோபிநாத் ஏற்பாடு செய்திருந்தார். விவாதம் சூடுபிடித்ததும் சில பெண்கள் தாலி தேவையில்லை. அது நாய் லைசென்ஸ் போன்றது என்றெல்லாம் சொல்ல அங்கே தனது வக்கிர புத்தியை கையாண்டார் கோபிநாத். அதாவது தாலி தேவையில்லை என்று சொன்ன ஒரு பெண்மணியிடம் அப்படியானால் நீங்கள் தாலியை கழற்றுவீர்களா? என கேட்க ஆம் கழற்றுவேன் என்று சொல்ல இங்கேயே கழற்றுவீர்களா? என மீண்டும் கேட்க, இதோ கழற்றுகிறேன் என்று கூறி அந்த பெண் தாலியை கழற்றி அவர் கையில் கொடுத்தார். கோபிநாத் எதிர்பார்த்தது அங்கே நிறைவேறியது. தாலியை கழற்றி கொடுத்த பெண்மணிக்கு பகுத்தறிவாளர், தைரியசாலி என புகழாரம் சூட்டி பரிசும் வழங்கப்பட்டது.
இதை பார்த்த இந்துக்கள் வெகுண்டெழுந்தனர். நாங்கள் புனிதமாக கருதுவதை பொதுமேடையில் விவாதிக்கும் நீங்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையை விவாதிக்கும் தைரியம் உண்டா? என விஜய் டிவிக்கு சவால் விட்டு சில தலைப்புகளையும் குறிப்பிட்டுள்ளனர்.
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி பர்தா அணிவதேன்?’, முஸ்லிம் பெண்கள் பள்ளிக்குள் அனுமதிக்கபடாததேன்?’, ரமலான் மாத நோன்பினால் பலனுண்டா?’, கிறஸ்தவர்கள் திருமணத்திற்கு பின் மோதிரத்தை கழற்றுவார்களா?’ என்பன போன்று பல தலைப்புகளை குறிப்பிட்டுள்ளனர்.
அவற்றில் ஒன்றான பர்தா விஷயத்தை கையிலெடுத்து நிகழ்ச்சி தயாரிக்க விஜய் டிவி திட்டமிட்டது. தாலி அவசியம் என பலர் பேசியதை எடிட் செய்து, தான் விரும்பியதை ஒளிபரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள வேளையில் பர்தா விவாதம் எப்படி முடிவுறும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இஸ்லாத்தையும், பர்தாவின் அவசியத்தையும் உணராத பெயர்தாங்கி முஸ்லிம்களை கொண்டு பொது இடத்திலே தாலியை கழற்றி வைத்ததுபோல் விஜய் டிவியின் கோபிநாத், பர்தாவையும் கழற்றி வீச செய்ய திட்டமிட்டிருந்திருக் கலாம். ஆனால் அதற்கு முன் தவ்ஹீத் ஜமாஅத் அந்த அவல நிலையை தடுத்து விட்டது. ‘இது குறித்து சுதந்திரமான விவாதம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தால் பர்தா குறித்த எத்தகைய கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான விளக்கம் தர நாங்கள் தயார் என்பதை அறிவுறுத்துகிறோம். இதற்கு ஏற்பாடு செய்வதே விவேகமானதாகும்’ என்று விஜய் டிவிக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் எழுதிய தபாலில் குறிப்பிட்டுயிருந்தது.
ஏற்கெனவே நடத்த திட்டமிடப்பட்டிருந்த அந்த விவாத நிகழ்ச்சி குறிப்பிட்ட தினத்தன்று (17-01-2010) ஒளிபரப்பப்படவில்லை. முஸ்ம்களின் உணர்வுகளை மதித்து ஒளிபரப்பை நிறுத்திய விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் பின்வருமாறும் அதற்கு அறிவுறுத்துகிறோம். மத விவகாரங்களை விவாதப் பொருளாக எடுப்பதை இனிமேலாவது விஜய் தொலைக்காட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அந்த அறிவுரை. எல்லா புகழும் இறைவனுக்கே!

0 comments:

கருத்துரையிடுக