புதன், 31 ஆகஸ்ட், 2011
ரூ.50 லட்சம் லஞ்சம்- வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் சிக்கினார்
தொழிலதிபர் ஒருவர் 160 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததில் இருந்து தப்பிக்க ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட வருமான வரித்துறை கூடுதல் ஆணையரை சி.பி.ஐ பிடித்துள்ளது. லஞ்சம் கொடுத்த தொழில் அதிபரும், ஏஜெண்டும் சிக்கியுள்ளனர். சென்னை வருமான வரித்துறையில் கூடுதல் ஆணையராக இருந்து வரும் ஆண்டாகு ரவீந்தர் (45) மீது ஏராளமான லஞ்ச புகார்கள் சி.பி.ஐ.க்கு வந்ததைத் தொடர்ந்து அவரை பிடிக்க திட்டமிட்டனர். இந்த நிலையில் சென்னை பெருங்குடியில் எவரான் என்ற பெயரில் இன்டர்நெட் நிறுவனம் நடத்தி வரும் தொழில் அதிபர் கிஷோரின் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.400 கோடி என்றும், அதில் ரூ.160 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும், இதில் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ரூ.50 லட்சம் லஞ்ச பணத்தோடு அதிகாரி ரவீந்தர் வீட்டுக்கு செல்வதாகவும் சி.பி.ஐ. ரகசிய தகவல் கிடைத்தது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வரும் கூடுதல் ஆணையர் ரவீந்தர் வீட்டை மாறுவேடத்தில் சிபிஐ அதிகாரிகள் கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது லஞ்சப்பணம் ரூ.50 லட்சத்தை தொழில் அதிபர் கிஷோர் கொடுக்க, அந்த பணத்தை எடுத்துக்கொண்டு உத்தம்சந்த் போரா (45) என்ற ஏஜெண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார்.
அப்போது சி.பி.ஐ. அவரை பணத்தோடு மடக்கி பிடித்தது. மும்பையை சேர்ந்த உத்தம்சந்த் போராவின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கிக்கொடுக்கும் ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார் உத்தம்சந்த். லஞ்சப்பணம் கொடுத்த தொழில் அதிபர் கிஷோரும் சிக்கினார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.5 கோடி தரவேண்டும் என்று அதிகாரி ரவீந்தர் வற்புறுத்தியதாகவும், பேரம்பேசி ரூ.50 லட்சம் தர முன்வந்ததாகவும் தொழில் அதிபர் கிஷோர் தெரிவித்தார். இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ரவீந்தரையும் சி.பி.ஐ. கைது செய்தது. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரையும் 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து புழல் மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
வெப்துனியா
0 comments:
கருத்துரையிடுக