திங்கள், 29 ஆகஸ்ட், 2011
கொச்சி விமான நிலையத்தில் ரன்வேயை விட்டு விலகி ஓடிய கல்ஃப் ஏர் விமானம்: 7 பயணிகள் படுகாயம்
கொச்சியில் இன்று காலை தரையிறங்கிய கல்ப் ஏர் விமானம், திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியது. உயிருக்கு பயந்து விமானத்தில் இருந்து குதித்த 7 பயணிகள் காயமடைந்தனர். 130 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பக்ரைன் நாட்டில் இருந்து கல்ப்ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஜிஎப் 270 விமானம், 137 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் நேற்றிரவு கொச்சி புறப்பட்டது. இன்று அதிகாலை 4.10 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தது. அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் ஒப்புதலுக்கு பிறகு விமானம் தரையிறக்கப்பட்டது.
ஓடுபாதையில் மழை வெள்ளம் தேங்கி இருந்தது. எனினும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி கொடுத்து விட்டதால் விமானத்தை தரையிறக்கினார் பைலட். அப்போது எதிர்பாராத விதமாக விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி ஓட ஆரம்பித்தது. இதுபற்றி பயணிகளுக்கு விமான கேப்டன் தகவல் அளித்தார். விமானத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டன. பயணிகள் பதற்றமடைந்தனர். விமானம் வெடித்து சிதறிவிடுமோ என்ற பயத்தில் சில பயணிகள் அவசர கதவு வழியாக ஓடுபாதையில் குதிக்கத் தொடங்கினர். கீழே குதித்தவர்களில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், எந்த அசம்பாவிதமும் இன்றி விமானம் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த 130 பயணிகள் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர்.
விமானத்தில் இருந்து குதித்ததில் பாலக்காட்டை சேர்ந்த சையத் முகமது என்பவருக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். மற்றவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கொச்சி ஏர்போர்ட்டில் பெரிய விமானங்கள் தரையிறங்க உடனடியாக தடை விதிக்கப்பட்டது. 10 மணி நேரத்துக்கு பிறகே பெரிய விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிய விமானங்கள் தரையிறங்குவதில் பிரச்னை இல்லை என்றும் அவைகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தினகரன்
0 comments:
கருத்துரையிடுக