திங்கள், 29 ஆகஸ்ட், 2011

அனைத்து மதத்தினரும் ஒற்றுமையா இருக்க வேண்டும்: இப்தார் விருந்தில் விஜயகாந்த் கோரிக்கை

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய்காந்த், நான் சின்ன வயதில் இருந்தே நோன்புக் கஞ்சி குடித்து வருகிறேன். மதுரை பள்ளி வாசலில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி மிகவும் ருசியாக இருக்கும். நோன்பு திறப்பு பற்றி எனக்கு அப்போது ஒன்றும் தெரியாது. பின்னர் திருக்குரானில் படித்து தெரிந்து கொண்டேன்.யார் தப்பு செய்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். இதுபற்றி குரானிலும், பைபிளிலும், பகவத் கீதையிலும் சொல்லப்பட்டுள்ளது.
 தப்பு செய்தால் தெய்வம் கண்ணைக் குத்தும், அரசன் அன்றே கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். எந்த தெய்வமும் கண்ணை குத்தாது. பத்மநாபபுரம் கோவில் பாதாள அறையை திறந்தால் தீய அசம்பாவிதங்கள் ஏற்படும் என்று கூறுகிறார்கள். எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.
எனக்கு தெய்வ பக்தி உண்டு. நான் சாமி கும்பிடுவேன். ஆனால் சிலர், சாமி கிடையாது என்று சொல்லிவிட்டு திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவார்கள். நான் அப்படி அல்ல. எனக்கு சாதி, மதம் கிடையாது. என் வீட்டு பூஜை அறையில் எல்லா சாமிகளின் படங்களும் இருக்கும். சாதி, மத பேதங்களை ஏற்படுத்தி மக்களை பிரித்தாள நினைக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் கோவிலை குறிக்கும் டெம்பிள் என்ற வார்த்தைக்கு 6 எழுத்து, மசூதியை குறிக்கும் மாஸ்க் என்ற வார்த்தைக்கு 6 எழுத்து. சர்ச் என்ற வார்தைக்கு 6 எழுத்து. இதேபோல், குரான், பைபிள், கீதா ஆகிய வார்த்தைகளுக்கு 5 எழுத்து. இப்படி மொழிகளும், வார்த்தைகளும் ஒற்றுமையாக இருக்கின்றன. அப்படி இருக்கும்போது மனிதர்களுக்குள் ஒற்றுமை இல்லாமலா போய்விடும்?
நாம் ஏன் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட வேண்டும்? எல்லாரும் சகோதரத்துவமாக இருப்போம். ஊழல், வறுமை என்ற சாத்தான்களை நாட்டைவிட்டு விரட்டுவோம், இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று ரம்ஜான் நாளில் சபதம் ஏற்போம். இனிமேல் தே.மு.தி.க. அலுவலகத்தில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றார்.

0 comments:

கருத்துரையிடுக